Thursday, January 22, 2009

இடையன்

நம் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒதிங்கிப்போவதல்ல, போராட்டமே !தொழிலாளிகள் மாநாடு இதற்கு ஒரு முன்னோட்டமே !



இடையன் கவிதை

பத்துமாதம் பதியம் போட்டாள் என்னை
அங்கே மகிழ்ச்சியும் இல்லை, துயரமும் இல்லை...
இருந்து கிடந்தேன் அவ்வளவே.

போதும் பொறுத்தது பிடுங்கி எடுத்தார்கள்
கதறினேன், அரற்றினேன் கேட்பாரில்லை.
அன்று அவளின் வெப்பமூச்சு நெருக்கத்தில்
என் அழுகையை விரட்டிவிட்டேன்

எங்கள் வீட்டுச்செடி மூன்று இலை விட்டது
மஞ்சள் பைகள் என் தோள்களில் சேர்ந்து கொண்டது.
சிகரம் தேடிய வானம்பாடிக்கு நடைபயிற்றுவித்தனர்.
மிச்சமும் மீதியுமாய் இருக்க வாழக்கற்றுத்தர வேண்டியவர்கள்
படித்ததை வாந்தியெடுக்க கற்றுக்கொடுத்தார்கள்.
என்னைச்சுற்றி வானத்துக்கும் பூமிக்குமாய்
கம்பிகள் நீண்டுகொண்டிருந்தன.
சிறைக்குள்ளும் பூக்கள் பூத்தது.
அடிபிடி சண்டைகளும், எச்சில் மிட்டாய்களும் என்
மகிழ்ச்சி அறையில் வாசம் செய்தன.

கண்ணாடியை என் பிம்பங்கள் அழுத்திக்கொண்டிந்த நேரம்
அவளின் வருகைக்காக காத்திருந்த நொடிகளையும்
தலை சாய்த்து சிரித்த பொழுதுகளையும்
பொறுக்கிச் சேர்த்தேன் மகிழ்ச்சிப்பைகளுள்
என் அந்திமா காலத்திற்கு தேவைப்படும் என்று.
இன்பத்தின் பொருள் கண்டேன், கூடவே
துன்பத்தின் பின்சேர்க்கையும்.

அழகிய நிர்வாணம் கலைந்து ஆடை உடுத்தச் சொன்னது காலம்.
அழுந்தும் சமூக பெருஞ்சக்கரத்தினுள் இழுத்துத் தினித்தனர்.
வர்ணங்கள் பூசி விட்டனர், முகவிலாசம் தேடச்செய்தனர்.
என் மகிழ்ச்சிப்பைகளை தட்டி கீழிடச் செய்த‌னர்.
அறைகளில் வாசம் செய்தவர்களைப்பிடித்துத்
தள்ளி கதவைச்சாத்தினர்.
உலகம் இருண்டது, என் மனதும் தான்.

கதறிக்கிடந்த என்னை, பிழைத்துக்கொள்
என்று கைகுட்டை கொடுத்து துடைக்கச்சொன்ன‌ன‌ர்.
தாலி கட்டி, தாரம் வாங்கி தாச‌த்தனம் செய்யக்கூறினர்.
சிரி என்று மிரட்டிப்பார்த்தனர்.

கிழித்து எறிந்தேன், காறி உமிழ்ந்தேன்.
நக்கித்திங்கும் பிண‌ந்தின்னிகளை அடித்து விரட்டினேன்.
அடைகாத்த அழுகிய கருப்பையை உடைத்து கிழித்து
வெளியேறினேன்.

வெறிகொண்டு அங்கும் இங்கும் ஓடினேன்.
மண்ணில் புரண்டு துலாவினேன்.
என் பைகளை என் தம்பிகள் எடுத்திருந்தனர்.
அறைகளை பக்கத்துவீட்டுச்சிறுவர்கள்...

ஊளையிடும் பேய்க்காற்றாய் அடித்துகொண்டிருந்தேன்.
இலக்கற்றிருந்த நான் பரந்த வெளிகளில்
வான் முட்டும் மலைகளில், குறுகிய சந்துகளில்,
அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் அடித்துத்திரிந்து
சோர்ந்து அடக்கப்பட்ட நேரத்தில்
மையிருட்டின் நடுவே ஒரு செவ்வொளியை கண்டேன்.
பத்து நாள் பட்டினி கிடந்த மிருகமாய்
விரைந்து போனேன், நெருங்க நெருங்க‌
என் கந்தல்கள் காற்றில் கரைந்தன,
கிழிசல்கள் பறந்து போயின.
நான் நிர்வானமாகிக்கொண்டிருந்தேன்.
காற்றின் உதடுகள் மெல்லப்புன்னகைத்தன.

இன்று என் மகிழ்ச்சியை மூட்டை தூக்குபவனோடும்,
எண்ணெய் காணா தலைகளோடும், நாற்று நடும்
பெண்களோடும் பொறுத்திக்கொண்டேன்.

பட்டாடை போட்ட ராஜாவைப்பார்த்த‌
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

மனிதனைப் பக்கத்து வீடுகளில் தேடும்
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

வீரர்களை நிலைக்கண்ணாடியில் பார்க்கத்தவறிய‌
உங்களுக்கு என் நிர்வாணம் தெரியாது.

ஏழு பிறப்பெடுத்தேன் என் வாழ்வில்
எட்டுத்திக்கும் பறந்து போனேன்,
நுகர்ந்தேன், சுவைத்தேன், களித்தேன், இனித்தேன்
இவையெல்லாம், தன் துன்பத்தின் காரணியறியா
கல‌ங்கும் நெஞ்சத்திற்காக போராடும் நொடிகளினும்
பெரிதன்று.

அய்யா நீங்கள் காத்திருக்க நான் முதல்வனுமல்ல,
உதாசினப்படுத்திப்போக கடையனுமல்ல,
இடையன்.

எங்கே தேடிகொண்டிருக்கிறீர்கள் என்னை
விலாசம் தேவையில்லை.

மக்கள் கூடும் சாலைகளில்
எண்ணெய் வழியும் நெற்றியோடும்,
வழித்துசீவிய முடியோடும்
செஞ்சட்டையணிந்து இறுகப்பிடித்த செங்கொடியுடன்
முழங்கிக்கொண்டிருப்பேன்
"புரட்சி ஓங்குக" என்று.

0 comments: